டெல்லி: வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29-ல் வெளியாகவுள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற விஐடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர்.

இதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்ச்சி பெறுவர்களுக்கு சேர்க்கை தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மே 9 முதல் 12 வரை கலந்தாய்வு நடைபெறும்.
நுழைவுத் தேர்வில் 8,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு மே 9-ஆம் தேதியும், 8001 முதல் 12,000 வரையிலானவர்களுக்கு 10-ஆம் தேதியும், 12,001 முதல் 16,000 வரையில் ரேங்க் பெற்றவர்களுக்கு 11-ஆம் தேதியும், 16,001 முதல் 20,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 12-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜி.வி.பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பி.டெக். படிப்புக்கான நான்காண்டு முழுவதும் 100 சதவீத படிப்புக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. நுழைவுத் தேர்வில் தர வரிசை 10 ஆயிரத்துக்குள் தகுதி பெறுவோருக்கு தலா ரூ. 50 ஆயிரம் கட்டணச் சலுகையாக படிப்புக் காலம் முழுமைக்கும் வழங்கப்படுகிறது.
இத்தகவலை வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












