சென்னை: சென்னையைச் சேர்ந்த பார்வையற்றவரான பெனோ ஜெஃபைன் தனது அயராத உழைப்பினை இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்றதன் மூலம் நிரூபித்துள்ளார். இதற்கான உத்தரவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் மின்னஞ்சலில் வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் என்.எல். சார்லஸ். இவரது மனைவி மேரி. இவர்களது மகள் பெனோ ஜெஃபைன். பிறவியிலேயே பார்வையற்ற இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்வையற்றவருக்கான லிட்டில் ஃபிளவர் பள்ளியில் பிரெய்லி முறையில் பயின்றார்.
அதன்பிறகு, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், அதே பிரிவில் முதுகலைப் படிப்பை லயோலா கல்லூரியில் பயின்றார். அதன்பிறகு, திருவள்ளூரில் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். மேலும், ஆங்கிலத்தில் முனைவர் பட்டத்திற்கும் படித்து வந்தார்.
இந்நிலையில், இளங்கலைப் படிப்பைப் படித்த போது இவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸஸ் தேர்வில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. அத்தேர்வை எழுதுமாறு இவரை பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஊக்குவித்தனர்.
இதையடுத்து 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் இவர் பிரெய்லி முறையில் தேர்வெழுதினார். 2014, ஜூன் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 343 ஆம் இடம் பெற்றார். இதையடுத்து, இவருக்கு மத்திய வெளியுறவுத் துறையில் உதவிச் செயலர் அந்தஸ்தில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நேற்று இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாமே எட்டிவிடும் தூரம்தான் என்று நிரூபித்துள்ளார் பெனோ ஜெஃபைன்.