சென்னை : வருகிற கல்வி ஆண்டில் கால்நடை மருத்துவப் படிப்பு ஐந்தரை ஆண்டு படிக்க வேண்டும் என்றும் புதிய பாடத்திட்டம் அமல்படுததப்படும் என்றும் துணைவேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் அவ்வப்போது மாணவர்களின் பாடத்திட்டத்தை மாற்றி வருகிறது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கால்நடை இளநிலை மருத்துவ படிப்புக்கான பி.வி.எஸ்.சி என்ற படிப்புக்கு பாட வல்லுனர்களை கொண்டு புதிய தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் தற்போது பி.வி.எஸ்.சி. படிப்பிற்கான காலம் 5 வருடம் என்று உள்ளது. அது வருகிற கல்வி ஆண்டில் இருந்து 6 மாதம் அதிகரித்து ஐந்தரை வருடமாக மாறுகிறது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காதவர்கள் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில்தான் கால்நடை மருத்துவ படிப்பு என்று அறிவிக்கப்பட்டதால் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.