சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வருகிற 2016-17 கல்வியாண்டில் 7 புதிய டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில் இந்த ஓராண்டு டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணைவேந்தர் திலகர் அளித்த பேட்டி:
பல்கலைக்கழகம் வருகிற கல்வியாண்டில் கால்நடை தீவன உற்பத்தி, கறி மற்றும் மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி, வான்கோழி வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, கறவைமாடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, கால்நடை செவிலிய உதவியாளர் படிப்பு என 7 புதிய டிப்ளமோ படிப்புளை(பட்டயப் படிப்பு) அறிமுகம் செய்ய உள்ளது.
ஓராண்டு கொண்ட இந்த படிப்புகள் புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி மையத்தில் வழங்கப்படும். இந்தப் படிப்புகளில் சேர பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படும்.
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்ததன் அடிப்படையில் முதல் கட்டமாக ரூ. 6.34 கோடியில் 10 நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன. அவை திருச்சி, தஞ்சை, மதுரை, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 2 வீதம் பயன்பாட்டுக்கு விடப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெற முடியும் என்றார் அவர்.