வாஷிங்கடன் : அமெரிக்காவிற்குச் சென்று உயர்கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மாணவர்களிடையே இதுவரை அதிகமாகக் காணப்பட்டது. டிரம்ப் கெடுபிடியினால் அமெரிக்க செல்ல வேண்டும் என்ற இந்திய மாணவர்களின் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது டிரம்ப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள்நாட்டினருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி வேலை செய்வதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகிற 'எச்-1 பி' விசாக்களுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெருத்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏராளமான இந்தியர்கள் இந்த விசாவில் அமெரிக்கா சென்று பணியாற்றி வருகிறார்கள்.
எச்1பி விசா
எச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் அரசு விதிக்க முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்காவில் வெளிநாட்டினர் மீதான இனவெறிதாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் மீதான இனவெறிதாக்குதல் அதிகரித்துள்ளது.
டிரம்ப் அரசு
டிரம்ப் அரசு சுற்றுலா விசா, கல்வி சம்பந்தப்பட்ட விசா மற்றும் தொழில் ரீதியான விசா எந்த விசாவாக இருந்தாலும் விசாவிற்கு விண்ணப்பவரிடம் தீவிர கெடுபிடிகளை கடைப்பிடிக்க வேண்டும் என டிரம்ப் அரசு தூதரகத்திற்கு ஆணையிட்டுள்ளது.
விசா விண்ணப்பதாரருக்கு கெடுபிடி
விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 15 ஆண்டுகளாக அவர் எங்கு குடியிருந்தார், என்ன வேலை செய்தார், கடைசி 5 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தொலைபேசி எண், இமெயில் முகவரி, சமூக வலைதள கணக்குகள் என அனைத்து தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என தூதரக அதிகாரிகளுக்கு டிரம்ப் அரசு ஆணையிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
எந்தவிதத்திலும் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் அவற்றிற்கு துணை செல்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனிமேல் அமெரிக்க விசா வாங்குவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்க்கல்வி ஆய்வுக்குழு
அமெரிக்காவில் உள்ள 250க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்குழு ஆய்வு செய்தனர். அதில் இந்தியா மாணவர்களின் சேர்கை குறையத் தொடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. டிரம்ப் அரசின் பல்வேறு அதிரடி ஆணைகளால் இந்திய மாணவர்களின் வெளிநாட்டு மோகம் குறையத் தொடங்கியுள்ளது.
இந்தியா மாணவர்களின் சேர்கை குறைவு
இளங்கலை பிரிவில் 26 சதவீதமும் பட்டதாரி வகுப்பில் 15 சதவீதமும் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 40 சதவீதம் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது.
இதுக்குறித்து விரிவான தகவல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என உயர்க்கல்விக்குழு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு மோகம் தணிந்தது
வெளிநாட்டு மோகம் தணிந்தது அமெரிக்காவில் கல்வி கற்கும் வெளிநாட்டினரில் 47 சதவீதம் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் அரசால் இந்திய மாணவர்களின் வெளிநாட்டு மோகம் குறைந்து தன் தாய் நாட்டிலேயே படித்து முடித்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்திய மாணவர்களிடையே வளரத் தொடங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.