சென்னை: அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பட்டமேல்படிப்புகளை படிக்கும் வழக்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மேல் படிப்புகளை படிக்கும் ஆர்வம் இந்திய மாணவர்களிடையே வெகுவாக அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 32 சதவீத மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்துள்ளனர்.
மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின்(SEVP) கீழ் இயங்கி வரும் பிரிவு இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவைச் சேர்ந்ததாகும்.
அமெரிக்காவுக்கு சீனா, இந்தியா, தென் கொரியா, சௌதி அரேபியா, கனடா, ஜப்பான், தைவான், வியட்நாம், மெக்ஸிகோ, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் அமெரிக்கா வருகின்றனர். இந்தில் இந்தியா, வியட்நாமைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் இந்திய மாணவர்கள் 31.9 சதவீதம் பேரும், வியட்நாம் மாணவர்கள் 25.9 சதவீதம் பேரும் அதிகமாக வந்துள்ளனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது சீனாவிலிருந்து 3 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாகக இந்தியாவிலிருந்து 1.5 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.