சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை நேற்று இரவு யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. யுபிஎஸ்இ இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் இந்த முறை 15933 பேர் எழுதினர். அவர்களில் 3200 நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 904 பேர் இந்ததேர்வு எழுதியதில் 240 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் 27ம் தேதி தொடங்கும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இணைய தளத்தில் யுபிஎஸ்சி வெளியிட உள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தகுதி பெற்றவர்களுக்கு இணைய தளத்தில் 18ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு இரண்டாம்கட்ட மூன்றாம் கட்ட அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறாதவர்கள் விவரங்கள், மதிப்பெண்கள் இறுதி முடிவு வெளியாகும் போது வெளியிடப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.