சென்னை: குடிமைப் பணித் தேர்வுகள் என்று அழைக்கப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் சரண்யா ஹரி. தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற வாலிபரும் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார்.
முடிவுகள்,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் சரண்யா பெற்றார்.
மனித நேய மையம்
அவர் சென்னை மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரண்யாவை மனிதநேய மைய தலைவர், மேயர் சைதை துரைசாமி மற்றும் அவருக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்
விமானப்படை
இதுகுறித்து சரண்யா நிருபர்களிடம் கூறியதாவது: நான் கிழக்கு தாம்பரம் விமானப்படை குடியிருப்பில் வசித்து வருகிறேன். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பை 2011-ம் ஆண்டு முடித்தேன். அதன் பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன். இதற்காக மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றேன்.
நன்றி
அந்த பயிற்சி நல்ல பயனுள்ளதாக அமைந்தது. அதற்காக மனிதநேய மையத்திற்கும், மைய தலைவர் சைதை துரைசாமிக்கும், எனக்கு பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
பார்வையற்ற மாணவர் பாலநாகேந்திரன்
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பட்டதாரி பாலநாகேந்திரனும் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்தவர். அவர் கூறியதாவது: நான் சென்னை ஓட்டேரியை சேர்ந்தவன். லயோலா கல்லூரியில் பி.காம். படித்தேன்.
கடுமையான உழைப்பு
தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைத்தேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறமுடியும் என்ற நிலையை மனிதநேய மையம் மாற்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத பயிற்சி கொடுத்து வருகிறது. நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன். இப்போது வெற்றி பெற்றேன் என்றார் அவர். இவரது தந்தை தேவதாஸ் முன்னாள் ராணுவவீரர். தாய் சுந்தரி.