வரும் மே மாதம் 26-ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜுன் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஏஎஸ் உள்ளிட்ட 24 விதமான குடிமைப்பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இது, முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு குடிமைப்பணிகளில் 1,055 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 5-ம் தேதி வரை பெறப்பட்டிருந்தன. முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு ஜுன் 16-ம் தேதி தள்ளிவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜுன் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












