யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று அழைக்கப்படும் மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2024-ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதனால் இந்தத் தேர்வுகளுக்காகக் காத்திருந்த தேர்வர்கள் குஷியடைந்துள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று அழைக்கப்படும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) அல்லது (UPSC), இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும்.

இந்த அமைப்பு மத்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் சிறப்பான பணியைச் செய்து வருகிறது.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்),இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.இந்திய அரசியலமைப்பு பகுதி 14 (XIV) -மத்திய மட்டும் மாநிலங்களின் கீழான சேவைகள் - விதிகள் 315 முதல் 323வரை)மத்திய அளவில் மற்றும் மாநில அளவில் தேர்வாணையங்களை நிறுவது குறித்து விளக்குகிறது.
மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் சீரிய முறையில் செயல்படுகிறது.
உயர்நிலை அரசுப்பணிச்சேவைகளில் இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற இந்திய அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கிணங்க 1926-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு முதல் தேர்வாணையத்தை அக்டோபர் முதல் நாளன்று நியமித்தது.
இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் பரிந்துரைகள் என்ற நிலையிலேயே இருந்ததால் இந்திய அரசியல்வாதிகளுக்கு இது திருப்தி அளிக்கவில்லை.
ஆகவே பிரிட்டிஷ் அரசு கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தை (Federal Public Service Commission) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் அமைத்தது.
இந்தச் சட்டம் அனைத்து மாநிலங்களிலும் மாநில அளவில் தேர்வாணையங்கள் அமைத்திட வழி செய்தது. விடுதலைக்குப் பிறகு, அரசுப்பணிகளுக்கு பாரபட்சமற்ற முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் பணியாளர்களின் உரிமைகளைக் காத்திடவும் தன்னாட்சி நிலைபெற்ற காப்பான அமைப்பொன்றின் தேவையைக் கருத்தில் கொண்டு அரசியலமைப்புப் பேரவை கூட்டு அரசுப்பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) உருவானது.
யுபிஎஸ்சி சார்பில் தற்போது வெளியாகியுள்ள தேர்வு அட்டவணை விவரம்
இந்நிலையில் தற்போது 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 வகையான தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதில் பொறியியல் சேவை முதல்நிலை தேர்வு குறித்த அறிவிப்பு செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த பொறியியல் சேவை தேர்வானது 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதே போல என்டிஏ & என்ஏ (NDA & NA) தேர்வு குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் குடிமைப் பணித் தேர்வுகள் எனப்படும் சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வுக்காண அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத் தேர்வானது 2025 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதுபோலவே இந்திய வன சேவை முதல்நிலை தேர்வு குறித்த அறிவிப்பு 2025-ஆம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்வானது 2025-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி நடைபெற இருக்கிறது என்று யுபிஎஸ்சி தற்போது அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வு அட்டவணை விவரம் வெளியானதால் இதற்காகக் காத்திருந்த தேர்வர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர். தற்போது இந்தத் தேர்வுகளுக்காக அவர்கள் தயாராகத் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications












