சென்னை: மத்திய பணியாளர் தேர்வு வாரியம்(யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் இன்று (ஜூலை 4) வெளியிடப்பட உள்ளன.
தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அப்போது எழுந்துள்ள காலியிடங்களைக் கொண்டு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது தெரியவரும்.
இந்தத் தேர்வு இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
2014-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-இல் நடத்தப்பட்டது. இதற்கான முடிவு அக்டோபர் 14-இல் வெளியிடப்பட்டது. பின்னர் முதன்மைத் தேர்வுகள் டிசம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வெளியிடப்பட்டன.
அதில் தகுதி பெற்றவர்களுக்கான கடைசித் தேர்வான நேர்முகத் தேர்வு கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குடிமைப் பணிகள் 2014 தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக, யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.