நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அன்லாக் 3-யின் படி பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் இறுதி முதல் ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கானது தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் தற்போது அன்லாக் 3 நடைமுறையில் உள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் இந்த அன்லான் 3 உள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது.
அதில், செப்டம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரையில் பள்ளிகளை வெவ்வேறு கட்டங்களாகத் திறக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதலில் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான முடிவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே எடுக்க அனுமதிக்கப்படும்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.