கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்படாமலேயே உள்ளது.
இதனிடையே, இந்த தேர்வுகளை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆராய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவினர் தற்போது மத்திய அரசுக்கு தனது பரிந்துரையை அளித்துள்ளது.
அதில், "கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்தபடியே உள்ளது. தற்போது தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களின் பருவத் தேர்வை ரத்து செய்யலாம்.
மேலும், முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சியை பல்கலைக்கழகம் முடிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவை பருவத் தேர்வை ஏற்கெனவே ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.