இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த ஊரடங்கு தொர்ந்து நீடிப்பதால் பள்ளி, கல்வி நிறுவனங்களையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் முதலே ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், பாதிப்பு குறைந்த பகுதிகளில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, சமீப நாட்களாக அதிகரித்தபடியே உள்ளது. இதனால், தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, அன்லாக் செயல்பாடுகள் மூன்று கட்டங்களாக அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதாவது அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவற்றில், இரண்டாம் கட்ட அன்லாக் திட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் பல்கலைக் கழங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும், சிவப்பு மண்டலம் தவிர்த்து பிற பகுதிகளில் மட்டுமே இது செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் அன்லாக் திட்டத்தில் கல்வி நிறுவனங்களைத் திறக்கும் எண்ணத்தில் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசுகள் மற்றும் பள்ளி கல்வி நிறுவனங்களை ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், இப்போது கல்வி நிறுவனங்களை திறக்க இயலாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.