சென்னை : பல்கலைக்கழங்களில் இருந்து மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் கட்டாயம் அவர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் எண் இருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ஜே.எஸ். சந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.
ஆதார் எண் கட்டாயம்
அதில் பட்டப்படிப்புச் சான்றிதழிலும், மதிப்பெண் சான்றிதழிலும் மாணவ மாணவியர்களின் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகியவைக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
கல்வி நிறுவன பெயர்களம் கட்டாயம்
மேலும் மாணவ மாணவியர்கள் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும் சான்றிதழில் வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். சான்றிதழ்களில் புகைப்படம் மற்றும் ஆதார் எண்கள் குறிப்பிடப்படுவதன் நோக்கம் போலிச் சான்றிதழ்களை தடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
போலிகளை கட்டுப்படுத்த
புகைப்படம் மற்றும் ஆதார் எண் இடம் பெறுவதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பாதுகாப்பாக கருதப்படுகிறது. இதுபோன்ற பாதுகாப்பு அடையாள அம்சங்கள் சான்றிதழில் இடம் பெறுவது பல குழப்பங்களைத் தவிர்க்கும் விதமாக அமையும். போலிகளையும் களைய உதவும்.
வரும் கல்வியாண்டு முதல்
சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் இருந்து இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












