பல்கலைக் கழக மானியக் குழுவான யுஜிசி நிர்ணயித்துள்ள பெயர்களில் மட்டுமே பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, UGC சார்பில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசு சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்களும், நாடாளுமன்ற சட்டப் பிரிவு 3-இன் கீழ் உருவாக்கப்படும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டங்களை வழங்கத் தகுதி பெற்றவை ஆகும்.
இந்நிலையில், சில பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கப்படாத பெயர்களில் பட்டங்களை வழங்கி வருகின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.
யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(3)- கீழ் எந்தெந்த பெயர்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.
இவற்றில், 35 இளநிலை பட்டப் பெயர்களும், 27 முதுநிலைப் பட்ட பெயர்களும் உள்ளன. அதன்படி மட்டுமே பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெறாத பெயர்களில் பட்டம் வழங்க விரும்பும் பல்கலைக்கழகங்கள், அந்தப் படிப்பைத் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக மத்திய பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.