அமெரிக்க பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, சவுதி, தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் உயர்கல்விக்காக மாணவர்கள் அமெரிக்கா செல்வது வழக்கம். அவ்வாறு அமெரிக்காவில் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்1, எம்1 போன்ற விசாக்கள் வழங்கப்படும்.
இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன. அவ்வாறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு குடியுரிமைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை. குறிப்பாக முழுவதும் ஆன்லைனில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் எப்1, எம்1 விசாக்கள் மூலம் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும், தற்போது அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடரும் பட்சத்தில் அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அல்லது மாணவர்கள் சட்டப்பூர்வமான நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து தங்கி இருக்க விரும்பினால் ஆன்லைன் அல்லாத பல்கலைக்கழகங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் உள்ளிட்ட பல அமெரிக்க பல்கலைக் கழகங்கள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் குடியுரிமை துறையின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.