2021-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவற்றில், பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள், புதிய திட்டங்கள் இடம்பெற்றிருப்பது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இருப்பினும், சிறு, குறு தொழிலாளர்களுக்கான மேம்பாட்டு நிதி, மூலப்பொருட்களின் விலை குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகாதது சற்றே ஏமாற்றத்தை அளிப்பதாக தொழில்முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சரி, இதைத் தவிர மத்திய பட்ஜெட்டில் உள்ள சில சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம் வாங்க.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள உதவித் தொகைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு திருத்தப்பட்ட கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும், 15,000 பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குச் சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம் எல்ஐசி-யின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு, ஒரு காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளும் விற்பனை செய்யப்படும். பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளும் விற்பனை செய்யப்படும்.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு செய்யப்படுகிறது.