சென்னை: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளையுடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள், அரசின் உதவித் தொகை பெற சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்திலுள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப் பதிவேட்டில் உள்ளவர்கள் கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் ஆதி திராவிடர் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் இதர வகுப்பினர் 40 வயதிற்குட்பட்டவராகவும் தனியார் மற்றும் சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி வயது மற்றும் வருமான வரம்பு ஏதுமில்லை. ஏற்கனவே உதவித் தொகை பெறுபவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.