சென்னை, மார்ச் 17: டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகளை அஞ்சல் வழியில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது.

அஞ்சல் வழிக்கல்விக் கழகம்(டிஇசி) தற்போது பல்கலைக் கழக மானியக் குழுவின்(யுஜிசி) கீழ் இயங்கி வருகிறது. இதையடுத்து டிஇசிக்கு யுஜிசி பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அது தொடர்பாக பொறியியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், பல்கலைக கழகங்கள் ஆகியவற்றுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் யுஜிசி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல எந்த ஒரு கல்வி நிறுவனமும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளைத் தவிர வேறு எந்த தொழில் நுட்ப படிப்புகளையும் அஞ்சல் வழிக் கல்வி முறையில் நடத்தக் கூடாது.
இளநிலை பொறியியல்(பிஇ) பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், கட்டடக் கலை(பிஆர்க்), நகர திட்டமிடல்(பி.பிளான்), மருந்தாளுநர்(பி.பார்ம்), ஹோட்டல் நிர்வாகம், உணவுத் தொழில் நுட்பம், முதுநிலை மேலாண்மை, டிஜிடிஎம் உள்ளிட்ட படிப்புகளை அஞ்சல் வழிக்கல்வி மூலம் நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் அந்த படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி அந்த சுற்றறிக்கையில் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications












