சென்னை: மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு வசதியாக பல்வேறு உதவித்தொகைத் திட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழங்கி வருகிறது. அந்த உதவித் தொகைத் திட்டங்களின் கீழ் மாணவ, மாணவிகள் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி தற்போது வரவேற்றுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக பல்வேறு உதவித்தொகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை யுஜிசி தேர்வு செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
தற்போது 2016-17-ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசித் தேதியாகும்.
அதுபோல, பெண்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் சமூக அறிவியல் - மானிடவியல் பிரிவு கல்வி உதவித் தொகை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசித் தேதியாகும். எஸ்.சி. பிரிவினருக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி உதவித் தொகை, சிறுபான்மை சமூகத்தினருக்கான தேசிய கல்வி உதவித் தொகை, ஓ.பி.சி. பிரிவினருக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டங்களின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும். ஒரே பெண் குழந்தைக்கான இந்திராகாந்தி முதுநிலை பட்ட கல்வி உதவித் தொகை, பல்கலைக்கழக அளவில் இளநிலை பட்டப் படிப்பில் ரேங்க் பெற்றவர்களுக்கான முதுநிலை பட்ட கல்வி உதவித் தொகை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான தொழில் படிப்பு கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு www.ugc.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.