சென்னை: ஆராய்ச்சி கண்காணிப்பாளர்கள் நியமனத்தில் புதிய கட்டுப்பாடுகளை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) விதித்துள்ளது.
இனி முழுநேர பேராசிரியர்களை மட்டுமே ஆராய்ச்சிக் கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி ஒரு சுற்றறிக்கையை அனுப்பித் தந்துள்ளது. அந்த சுற்றறிக்கையின் விவரம்:
யுஜிசி வழிகாட்டுதல் 2009-இன் படி, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சி கண்காணிப்பாளராக முழுநேர பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், சில பல்கலைக்கழகங்கள் பகுதி நேர பேராசிரியர்கள், வருகைப் பேராசிரியர்களை ஆராய்ச்சி கண்காணிப்பாளர்களாக நியமித்திருப்பது யுஜிசி-யின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவ்வாறு விதிகளை மீறும் பல்கலைக்கழகங்கள் மீது யுஜிசி சட்டம் 1956-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரும் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்படும் என எச்சரிக்கையும் செய்துள்ளது.