பல்கலைக்கழங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தங்களது பணியிடங்களில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள 'யுஜிசி' எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழங்கள் இடையே செயல்பாடுகளை அதிகரிக்கவும் தகவல் பரிமாற்றங்களுக்காகவும் 1925-ல் பல்கலைக்கழக வாரியம் என்ற பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதை 'இண்டர் யுனிவர்சிட்டி போர்டு' என்று அழைத்தனர்.

இதேபோல 1944-ம் ஆண்டில் கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனை வாரியம் 'சார்ஜியன்ட் அறிக்கை' ஒன்றை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி 1945-ம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்த அலிகர், பனாரஸ், டெல்லி ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிடத் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புதான் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி). இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் இதர பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட யுஜிசியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பணியிடங்களில் மகளிருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புதிய அறிவிபிப்பை யுஜிசி வெளியிட்டுள்ளது.
யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து அவர்களை பாதுகாத்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக பாலியல் துன்புறுத்தல் சட்டம் கடந்த 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் சிறப்பான முறையில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை கடந்த 2015-ல் யுஜிசி வெளியிட்டது. அதில் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தண்டனை விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக கல்வி நிறுவனங்களில் மகளிர் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான வன்முறைகளை கையாள்வதற்காக புகார் குழு மற்றும் சிறப்பு மகளிர் பிரிவை அமைக்க வேண்டும். மகளிர் மீதான பாலின துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் கல்லூரி வளாகங்களில் காட்சிபடுத்த வேண்டும்.
மேலும், விளம்பர பலகைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை விவரங்களையும், இதுதொடர்பாக புகார் அளிக்க பெண்களுக்கான இலவச உதவி எண் 181, ஆதரவு எண் 112 ஆகியவற்றையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம் மற்றும் அதுதொடர்பான யுஜிசியின் விதிமுறைகள், புகார் குழுக்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இடம்பெற செய்தல் வேண்டும்.
மேலும், நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் தவறாமல் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை saksham.ugc.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












