கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் நாடு முழுவதும் புதிய கல்லூரிக்கோ அல்லது புதிய பாடப்பிரிவுகளுக்கோ அனுமதி வழங்கப்படாது என பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தெரிவித்துள்ளதாக உயர் கல்வித் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவை துவக்க வேண்டும் என்றாலோ அல்லது புதிய கல்லூரிகளைத் துவக்க வேண்டும் என்றாலோ பல்கலைக் கழக மானியக் குழுவின் அனுமதி பெறுவது கட்டாயம்.
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, புதிய பாடப்பிரிவுகளுக்கும் யுஜிசி அனுமதி அளித்து வருகிறது.
ஆனால், தற்போது கொரோனாவின் தாக்கத்தால் கல்விப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் நடப்பாண்டில் நாடு முழுவதும் எந்த ஒரு புதிய கல்லூரிக்கோ அல்லது புதிய பாடப்பிரிவுகளுக்கோ அனுமதி கிடையாது என்று பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளதாக உயர் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.