கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால், கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதால் ஊரடங்கும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஓர் சில பல்கலைக் கழகங்கள் தங்களது உறுப்பு கல்லூரிகளில் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளன.
இருப்பினும், இதர கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பருவத் தேர்வுகள் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங்கள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.