நெட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பல்கலைக்கழங்களில் பிஎச்.டி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் 'நெட்' தகுதித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகத்தினஅ கீழ் இயங்கும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு ஜூன், டிசம்பர் என இருமுறை நடத்தப்படும்.

இதற்கிடையே பல்கலைக்கழகங்கள் சார்பில் பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதனால் பட்டதாரிகள் பல தேர்வுகளை எழுத வேண்டிய நிலையுள்ளது.
இதையடுத்து, தேசிய கல்விக் கொள்கை-2020 அறிவுறுத்தலின்படி மாணவச் செல்வங்களுக்கு உதவும் விதமாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு அடிப்படையில் பிஎச்.டி சேர்க்கையை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து பகுப்பாய்வு செய்து அறிக்கை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் 2024-25-ம் கல்வியாண்டு முதல் பிஎச்.டி மாணவர் சேர்க்கைக்கு 'நெட்' மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












