அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 3ம் தேதியன்று கணிதத் தேர்விற்கான அரியர் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சுமார் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இத்தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், தேர்வு துவங்கிய சில நிமிடங்களிலேயே அந்தத் தேர்வின் வினாத்தாள் ஏற்கனவே வெளியாகியிருப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் வரப்பெற்றது. இதனை உறுதி செய்த அதிகாரிகளும் உடனடியாக தேர்வை ரத்து செய்தனர். தொடர்ந்து, ரத்து செய்யப்பட்ட கணிதத் தாள் 2 பாடத்திற்கான அரியர் தேர்வு டிசம்பர் 12ம் தேதியன்று நடைபெற்றது.
வினாத்தாள் வெளியானது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சுரேஷ்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் தமது உறவினர் மூலம் வினாத்தாளை சுரேஷ்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். அதை தமது நண்பர் ஹரிகிருஷ்ணனிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
ஹரிகிருஷ்ணன், அந்த வினாத்தாளை தமது பிற நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். இவ்வழக்கில், வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications












