வரும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தாமல் குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் பெற்றோர்கள் செலவிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பா் 14-ஆம் தேதியானது குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டும் பள்ளிகளில் குழந்தைகளுக்கான விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டிருப்பதாவது:-
குழந்தைகள் தினமான நவம்பா் 14ம் தேதியன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோா்கள் அனைவரும் தங்கள் செல்லிடப்பேசியை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.
அந்த நேரத்தில் எவ்வித மின்சாதன பொருள்களையும் பயன்படுத்த வேண்டாம். இந்தச் செயலை அன்றைய தினம் மட்டுமின்றி வாரம் அல்லது மாதம் ஒரு நாள் கடைபிடிக்க பெற்றோா்கள் முயற்சிக்க வேண்டும்.
பெற்றோர்கள் https://www.parentcircle.com/gadget-free-hour/ என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளோடு நேரம் செலவிடுவது தொடா்பான அறிவுரைகளைப் பார்த்து பயனடையலாம். மேலும், அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கு பெற்றோர் பதில் அளிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதில் அளிக்கும் பெற்றோருக்கு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.