சென்னை : நீட் தேர்வு என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வாகும். இது மத்திய அரசால் நடத்தப்படும் ஒரு தேர்வாகும். நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக மீண்டும் முயற்சி எடுத்துள்ளார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். மேலும் அவருடன் சுகாதாரதுறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அடங்கிய தமிழக அதிகாரிகள் குழு ஒன்றும் பிரதமரின் செயலாளரைச் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதுக் குறித்து வலியுறுத்தினார்கள் மேலும் நீட் தேர்வு சம்பந்தப்பட்ட மற்ற துறைகளின் முக்கய அதிகாரிகளையும் சந்தித்தார்கள்.
நீட் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படாவிட்டாலும் குறைந்தது 2 அல்லது 3 வருடங்களாவது விலக்கு அளிக்கவேண்டும் என வலியுறுத்திஉள்ளனர். விலக்கு அளிக்கப்படும் காலக்கட்டத்தில் தமிழக அரசின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்து தமிழக மாணவ மாணவியர்களை நீட் தேர்விற்கு தயார்படுத்தி விடுகிறோம் எனக் கூறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்விற்கான காலக்கேடு முடிந்து விட்டது. நீட் தேர்விற்கான நுழைவுச்சீட்டு இன்றிலிருந்து (15.03.2017) வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2007ம் ஆண்டில் இருந்து இதுவரை மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அவர்களது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே சேர்க்கப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு மூலம்தான் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. தமிழக மாணவர்கள் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு நீட் தேர்வு கடினமான ஒன்றாகத்தான் கட்டாயம் இருக்கும். இதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரைச் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழக அமைச்சர்களும் மத்திய மந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்தினர். இருப்பினும் நீட் தேர்வு சட்டமசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை.