சென்னை: கலை, அறிவியல் படித்தவர்கள் மேலாண்மைக் கல்வி பயில்வதற்காக பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம்.
1984-ல் தொடங்கப்பட்டது இந்தக் கல்வி நிறுவனம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேலாண்மைக் கல்வியை செவ்வனே அளித்து வருகிறது இந்த இன்ஸ்டிடியூட். இந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பில் நிதி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் 120 பேர் படிப்பில் சேர அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் அரசு விதிப்படி இக்கல்வி நிறுவனத்தில் 69% இடஒதுக்கீடு தமிழக மாணவர்களுக்குப் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில், பிற்பட்ட வகுப்பினருக்கு 30%, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 20 %, தாழ்த்தப்பட்டோருக்கு 15% அருந்ததியினருக்கு 3 %, பழங்குடியினருக்கு 1% என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நிறுவனத்தின் இயக்குநர் எஸ். கருத்தையா பாண்டியன் கூறியது:
எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்று வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் ஆண்டு வருமானம் குறைந்தது ஆண்டுக்கு ரூ.6 லட்சமாகவும், அதிகபட்சமாக ரூ.14 லட்சமாகவும் உள்ளது. சராசரியாக மாணவ, மாணவிகளின் ஆண்டு வருமானம் ரூ. 9.1 லட்சமாக உள்ளது.
வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் மாணவர்களைத் தயார்படுத்துவதை இக்கல்வி நிறுவனம் பிரதானமாகக் கொண்டுள்ளது.
பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டு,செப்டம்பர் அல்லது அக்டோபரில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற விவரங்கள் நுழைவுத் தேர்வு அறிவிப்பிலேயே வெளியிடப்படுகிறது.
பொதுவாக மேலாண்மைப் படிப்பு என்றால் பொறியியல் படித்தவர்கள்தான் சேர முடியும் என்ற கருத்து பொதுவாக இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையில்லை. மேலாண்மைப் படிப்பில் சேருவதற்கு கலை அறிவியல் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பை வழங்கி வருகிறோம். இந்த விவரம், பலருக்கும் தெரியவில்லை என்பது தான் உண்மை. ஆனால் அந்த அதிசயம் இங்கு நடக்கிறது என்றார் அவர்.