குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காகப் பழங்குடி மாணவர்களை சர்கார் படத்திற்கு அழைத்துச் சென்று பலரது வரவேற்பைப் பெற்றுள்ளார் வயநாட்டு துணை ஆட்சியர்.
துணை ஆட்சியர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ் கேசவன் மத்திய அரசின் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். அதோடு பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு சமூகப் பணிகளையும் அவர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அட்டப்பாடி மலைக் கிராமம்
சமூக பணிகளிலும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் துணை ஆட்சியர் உமேஷ் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல இவரது முகநூல் பக்கத்தில் பலரது வரவேற்பைப் பெற்று வருகிறது. அவற்றில், பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள அட்டப்பாடி மலைக் கிராமம் குறித்து கடந்த வருடம் இவர் பதிவிட்ட கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்கார்
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவும் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. குறிப்பாக, விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரின் பதிவில், "மனந்தவாடி பகுதியில் விடுதியில் தங்கியிருக்கும் பழங்குடியின கிராம சிறுவர்களுடன் விஜய் நடிப்பில் வெளியான "சர்கார்" படம் பார்க்கச் சென்றேன். நிறைய அரசியல் காட்சிகள் இருப்பதால் குழந்தைகள் படம் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்காது என்பதால் முதலில் சர்கார் படத்துக்கு அழைத்துச் செல்ல விருப்பமின்றி குழந்தைகளிடம் சர்கார் படம் வேண்டாம், ரஜினியின் 2.0 படத்துக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்தேன். ஆனால், குழந்தைகள் அதை ஏற்க மறுத்ததுடன் விஜய் படத்துக்குத் தான் செல்ல வேண்டும் எனக் கூறினர்.
சூப்பர் ஸ்டார்கள்
வெளியுலகத்திற்குப் பெரிதாக அறியப்படாத பகுதிகளிலும் திரைப்படமும் அதன் சூப்பர் ஸ்டார்களும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்." எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது தமிழகம், கேரளம் என முழுவதும் பரவி வருகிறது.
80 கோடி பேருக்கு வேலை போகப்போது, ஆனா இவங்க மட்டும் எப்பவும் ராஜாதான்!!