மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றாம் முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் (TET) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் இந்த வகை ஆசிரியர்கள் CTET என்னும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாடு அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வினை தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் சுமார் 1 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சியடைந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி, ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு என்று வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் காத்திருந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, 2018 டிசம்பர் மாதத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.