பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என அறிவித்தது செல்லாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகள்
தமிழகத்தில் அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடைபெற்றது. இதில் 1,33,569 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
வினாத்தாள் முறைகேடு
அவ்வாறு தேர்வில் பங்கேற்றவர்களில் தேர்ச்சிபெற்ற 2,000க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, வினாத்தாளில் முறைகேடு செய்து, 196 பேர் தேர்ச்சி பெற்றதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்வு ரத்து
இதனைத்தொடர்ந்து, இந்த தேர்வை ரத்து செய்வதாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழக அரசின் உத்தரவு சரி தான் என்று தீர்ப்பளித்தார்.
196 மாணவர்கள்
இதே சம்பவம் குறித்தான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரிக்கப்பட்டது. அதில், 196 பேர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
மாறுபட்ட தீர்ப்பு
இந்த இருவேறு தீர்ப்புகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த சூழலில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பிடி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தமிழக அரசின் உத்தரவு செல்லாது
இதில், பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து, பணி நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றம் அதிரடி
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு குறித்த மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பில் தமிழக அரசின் தேர்வு ரத்து உத்தரவு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












