சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 1807 ஆசிரியர் பணியிடங்களில் புதியதாக முதுநிலை பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 10ம் தேதி நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் 1,90,950 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒரு பதவிக்கு ஒருவர் என்ற வீதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு முதுநிலைப் பட்டதாரிகள் அழைக்கப்பட்டனர். விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய இடங்களில் சான்று சரிபார்ப்பு கடந்த 16, 17ம் தேதி நடந்தது.
போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வேலை வாய்ப்பு பதிவு மூப்புக்கான மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண், ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியுள்ள முதுநிலைப்பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்படி 1700 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. தெரிவு செய்யப்பட்டவர்கள் விரைவில் கவுன்சலிங் மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள். கவுன்சலிங் தேதியை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிடும்.