பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 16 முதல் மூன்று நாள்கள் நடக்கின்றன. கடந்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்,1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கணினி மூலம் கடந்தாண்டு(2021) டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை, கடந்த மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை, மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில், விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு ஒரு பணியிடத்திற்கு, 2 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதும், ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
Physics, Chemistry, English மற்றும் Mathematics, Textile Technology, Production Engineering, Printing Technology ஆகியப் பாடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்று இருக்கும் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு, ஜூலை 16 நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
மற்றப் பாடங்களுக்கு 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் மட்டுமே வெளியிடப்படும்; நேரடியாக அனுப்பப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
இன்று முதல்(ஜூலை 14) அழைப்பு கடிதத்தினை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.