சென்னை : டி.இ.டி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் கையெழுத்து மற்றும் புகைப்படம் இல்லாமல் கவனக்குறைவுடன் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் டி.ஆர்.பி மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 29ந் தேதி இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தேர்வும், ஏப்ரல் 30ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிதி தேர்வும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 29 மற்றும் 30ந் தேதிகளில் நடைபெறும் தேர்விற்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பின் போது பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சரிவர பூர்த்தி செய்யாதது தெரிய வந்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டாமல், ஓ.எம்.ஆர் தாளில் கையெழுத்து போடாமல் அனுப்பியுள்ளார்கள் என்பது விண்ணப்பம் பரிசீலனையின் போது கண்டறியப்பட்டது.
மேலும் விண்ணப்பம் ஒப்படைக்கும்போது பலரது ஓ.எம்.ஆர் சீட்டுகள் மடிக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை கணினி மூலம் மதிப்பீடு செய்ய முடியாது என்பதால் அவை அனைத்தும் டேமேஜ்ஜாக கணக்கிடப்பட்டு அதற்குப் பதிலாக மாற்று சீட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலர் அஜாக்கிரதையாக விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. விண்ணப்பமே சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் 100க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற தவறுகள் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் நடந்த நோடல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ஹால் டிக்கெட்'டில், தேர்வரின் புகைப்படம் இல்லை என்றால், இணைய தளத்தில் உள்ள அதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஓ.எம்,ஆர்., ஷீட்டில் கையெழுத்து இல்லாத தேர்வர்களின் விண்ணப்பத்தில், பிறபக்கங்களில் உள்ள கையெழுத்தை 'ஸ்கேன்' செய்து, ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.