சென்னை : தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கை பானு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் படிப்பை தொடங்க உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஓலக்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய தூத்துக்குடி மாவட்டம், ஓலக்குடி கிராமத்தைச் சேர்ந்த முதல் திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி பெற்றுள்ளார்.
பச்சைக்கிளி தூத்துக்குடி மாவட்டம், ஓலக்குடி கிராமத்தில் வசித்து வருபவர். அங்குள்ள சவலப்பேரி பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளியில் 2014ம் ஆண்டு பதினொராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி, தனது பெயரை தாரிகாபானு என பெயர் மாற்றம் செய்து கொண்டு அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்.
இதையடுத்து தாரிகா பானு திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், கிருஷ்ணாஜி தெருவில் 2014-ஆம் ஆண்டு குடியேறினார். இதையடுத்து தனது பள்ளிக் கல்வியை தொடர்வதற்காக பல பள்ளிகளில் கேட்டார். ஆனால் அவர் திருநங்கை என்பதால் பல பள்ளிகள் அவரை சேர்க்க மறுத்துள்ளது.
அவரது பல போராட்டங்களுக்கு பிறகு அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் சேர தாரிகாபானுவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கினார். இதைதொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த தாரிக்கா பானு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய முதல் திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி பெற்றுள்ளார். தாரிகா பானுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு திருநங்கையாக மருத்துவம் படிக்க வேண்டும், மருத்துவ துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்று தாரிகா பானு தெரிவித்துள்ளார்.