மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஜூன் 11) வெளியிடப்பட்டதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறை 10-வது இடத்திலிருந்த திருச்சி ஐஐடி இந்த ஆண்டு 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுகுறித்து, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சாா்பில், ஆண்டுதோறும் தேசிய அளவில் கல்வி நிறுவனங்கள் தர மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிப்பதற்காக என்ஐஆா்எப் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டிற்கான NIRF தர மதிப்பீட்டுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமானது பொறியியல் கல்வி நிறுவன தரவரிசையில் 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு இருந்த 10ஆவது இடத்திலிருந்து இந்தாண்டு மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது.
இதனால், திருச்சி ஐஐடி-யின் ஒட்டுமொத்த மதிப்பெண் 64.1-ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டின் மதிப்பெண் 61.62 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி ஐஐடி-யைப் பொறுத்தவரையில் கற்பித்தல் - கற்றல் வளங்கள், புதிய ஆசிரியர்கள், மாணவர்களின் தரம், நிதி ஆதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியலைத் தக்க வைக்க முடிந்துள்ளது. ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நடைமுறையின் முன்னேற்றத்தாலும் மதிப்பெண் அதிகரித்துள்ளது. இதன் மூலம், அறிவுசாா் சொத்துரிமை மற்றும் காப்புரிமைகளைத் தாக்கல் செய்ய திருச்சி என்ஐடி முன்னோடியாக அமைந்துள்ளது.
அனைத்துக் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலிலும் திருச்சி என்ஐடி 24-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் தலைசிறந்த 25 கல்வி நிறுவனங்களில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமும் ஒன்றாகியுள்ளது. ஒட்டுமொத்த மதிப்பெண்ணிலும் கடந்தாண்டு இருந்த 54.3 என்ற நிலையிலிருந்து 55.92 மதிப்பெண்ணுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பொறியியல் துறையில் 12 ஆவது நிலையிலிருந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது பெருமைக்குரியது இவ்வாறு அவர் கூறினார்.