சென்னை: சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். எனவே இந்த மருத்துவப் படிப்புகள் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தைத் தயார் செய்து விண்ணப்பங்களை வேகமாக சமர்ப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டன. ஆனால் இணையதளம் மூலம் டவுன்லோடு செய்வதைக் காட்டிலும் நேரில் வந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வாங்கிச் சென்றனர்.
நேரடி விண்ணப்பங்கள் 4900 என்ற அளவுக்கு விற்பனையாயின.
இணையதளம் மூலம் 250 விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டன. ஆக மொத்தம் 5,150 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏராளமான மாணவ, மாணவிகள் ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டனர். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் கடைசி சென்று விண்ணப்பங்களைச் சேர்க்க ஆயத்தமாகி வருகின்றனர். மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்ட பின்பு ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் இறுதியில் கலந்தாய்வு நடைபெறும் என சித்த மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்த்துள்ளனர்.