தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமையோடு கெடு முடிந்தது.
தமிழகத்தில் மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 19 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 2,555 இடங்கள் உள்ளன.
இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவிதம் என 383 இடங்கள் தவிர்த்து, 2,172 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மேலும் 100 இடங்கள் கிடைக்கும். அதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதம் 85 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2257 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், விண்ணப்பிப்பதற்கும் மே 28-ஆம் தேதி கடைசி நாள். 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் எத்தனை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்ற விவரம் விரைவில் வெளியாகும்.