சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி அறிக்கை அளித்து மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சமீபத்தில் கைரேகை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் எஸ்.அருணாச்சலம் என்பவர் பங்கேற்று எழுதினார். அப்போது, அவர் கணிதம் தொடர்பான ஒரு கேள்விக்குத் தவறான பதில் அளித்ததாக மதிப்பெண் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அருணாச்சலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம், ஐஐடி-யில் பணியாற்றும் கணித நிபுணரிடம் இதுகுறித்து கருத்துக் கேட்டு அறிக்கை அளிக்கும்படி தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐஐடி-யில் பேராசிரியர் எனக் கூறப்பட்ட டி.மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையை, சில நாள்களில் தேர்வாணைய அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், அருணாச்சலம் கூறிய தகவல் தவறு எனக் குறிப்பிட்டிருந்ததால், நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அறிக்கை அளித்த டி.மூர்த்தி என்பவர் ஐஐடி-யிலேயே பணியாற்றவில்லை என்றும் அந்த அறிக்கையானது போலி என்று அருணாச்சலம் மீண்டும் ஒரு மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, போலியான நிபுணர் அறிக்கை கொடுத்து மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகர் ஜி.வி. குமார் (51), அடையாறு கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டி.மூர்த்தி (62) ஆகியோர் மீது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆலோசகர் ஜி.வி.குமாரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு உளவியல் தொடர்பான கேள்விகளைத் தயாரித்துக் கொடுக்கும் பணியைச் செய்து வந்துள்ளார்.
கணிதக் கேள்வி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம், தேர்வாணைய அதிகாரிகளிடம், ஐஐடி கணிதப் பேராசிரியரிடம் கருத்துக் கேட்டு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டபோது, அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட ஆலோசகர், ஐஐடி பேராசிரியரிடம் அறிக்கை பெறுவதற்குப் பதிலாக, கேந்திரிய வித்தியாலயா பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மூர்த்தியிடம் அறிக்கையைப் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.