தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும், அவற்றில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும் எனவும் அதிரடி முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி நிர்வாகம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் இன்று (பிப்., 15) செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அவ்வப்போது தனது தேர்வு முறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை அறிவித்தது.
இதன் அடுத்தகட்டமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வாணையக் குழுமம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை பின்வருமாறு:-
TNPSC குரூப் தேர்வு கட்டுப்பாடுகள்
1. குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்துவந்தது. இனி, இந்த தேர்வுகள் முதனிலை மற்றும் முதன்மை தேர்வுகளாக நடத்தப்படும்.
2. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடத்தப்படும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வறைக்கு வர வேண்டும். 10 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயம். ஏதேனும் ஒரு வினாவுக்குப் பதில் அளிக்கவில்லை என்றால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
4. விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும்.