கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பங்கேற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஓர் இன்ப அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, 6491 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது மேலும், கூடுதலாக 3 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது அதிகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4
டிஎன்பிஎஸ்சி சார்பில் சமீபத்தில் 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நடந்து முடிந்தது. இதனிடையே, தற்போது, காலிப்பணியிடம் 9398 ஆக அதிகரித்துள்ளதாகவும், எனவே அதற்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கை
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் திங்கள்கிழமை இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்4 (2018-2019, 2019- 2020 ஆண்டுக்கானது) பதவியில் காலியாக உள்ள 6491 பணியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் 1ம் தேதி தேர்வு நடந்தது.
இந்த தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டது. அதாவது தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்களது தரவரிசை ஆகியவை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது.
8, 12-வது தேர்ச்சியா? ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
பணியிடங்கள் அதிகரிப்பு
இந்நிலையில், 2018, 2019ம் ஆண்டுக்கான குரூப்-4 காலிப்பணியிடங்கள் 6491ல் இருந்து 9398 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 397ல் இருந்து 607 ஆகவும், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 2688, இளநிலை உதவியாளர் (பிணையம்) 104, வரித்தண்டலர் (கிரேடு-1) 34 என 4558 ஆக பணியிடங்கள் உயர்ந்துள்ளன.
சுருக்கெழுத்து தட்டச்சர்
மேலும், தட்டச்சர் பணியிடம் 1091ல் இருந்து 2734 எனவும், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) 784ல் இருந்து 994 எனவும், நில அளவர் 509ல் இருந்து 505 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரைவாளரில் 74 பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வாளர் பட்டியல் வெளியீடு
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களும் கணக்கில் சேர்க்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு என தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.