சென்னை: நடப்பாண்டில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தலைவர் கே. அருள்மொழி வெளியிட்டுள்ளார்.
பட்டியல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தேர்வு குறித்த அறிவிப்பு, தேர்வுகளின் முடிவு வெளியிடப்படும் உத்தேச தேதி ஆகியவை கொண்ட பட்டியலை அதன் தலைவர் கே.அருள்மொழி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு 33 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாக உள்ளது.
5513 பணியிடம்
இந்த அறிவிப்பு மூலம் 5,513 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதில் குரூப்-4 மூலம் 4,931 பணியிடங்கள், குரூப்-1 தேர்வு மூலம் 45 பணியிடங்கள், 65 உதவி சிறைச்சாலை அதிகாரி பணியிடங்கள், தொகுதி சுகாதார புள்ளிவிவரம் 172 பணியிடங்கள் ஆகியவை அடங்கும்.
சுற்றுலா அதிகாரி
சுற்றுலா அதிகாரி 5 பணியிடங்கள், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்கள் முதன் முதலாக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு துறைகள் மூலம் நடப்பாண்டு மேலும் 5 ஆயிரம் காலி பணியிடங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொத்தம் 10,000
இவற்றையும் சேர்த்து மொத்தம் இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு உள்ளது.
விஏஓ தேர்வு
மழையால் பின் தேதியிடப்பட்டு, அடுத்த மாதம் நடைபெற உள்ள கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) 814 காலி பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நான் பதவியேற்ற பிறகு இதுவரை 15 தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.
6 ஆயிரம் பணியிடம்
மேலும் 6 ஆயிரத்து 654 பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அனைத்தும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதியை பாதிக்காதவாறு திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
மகிழ்ச்சி
பேட்டியின்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி-யின் இந்த அறிவிப்பால் வேலை தேடும் இளைஞர்கள், பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












