தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள 176 உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் தற்போது அந்தத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகத் தேர்வுகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா கிரும பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது இந்தியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் என பல வளாகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது கொரோனா கிருமி பரவுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத்தேர்வு 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, டிஎன்பிஎஸ்சி சார்பில் 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதியானது விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.