குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி உட்பட்ட 2022-ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
வரும் 2022-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், 2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
டிஎன்பிஎஸ்சி அட்டவணையின் படி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பேசிய அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.
குரூப் 2 பிரிவில் 5831 பணியிடங்களும், குரூப் 4 பிரிவில் 5255 பணியிடங்களும் காலியாக உள்ளது. மேலும், காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.
மேலும், டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகி 75 நாட்களுக்குப் பின் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். குரூப் 4 தேர்வில் கட்டாய தமிழ் மொழி பாடத்தில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.