சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் புதிய ஆன்-லைன் படிப்பு முறையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், "தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக மும்பையைச் சேர்ந்த -Schoolguru Edu Survey- தனியார் நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல்கட்டமாக 27 வகையான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் ஆன்-லைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் 108 படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு விடும்.
இந்தப் புதிய முறையில் சேரும் மாணவர்கள் ஆன்-லைனிலேயே சேர்க்கை, புத்தகங்கள் பதிவிறக்கம் என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே செய்து கொள்ளலாம்.
அதோடு, தலைசிறந்த ஆசிரியர்களின் விடியோ வகுப்புகள், உரையாடல்கள், பாடங்களையும் செல்போனிலேயே மாணவர்கள் பார்க்கலாம். இவை அனைத்தும் மெமரி கார்டில் (மைக்ரோ ஹெச்.டி. கார்டு) கொடுக்கப்படுவதால், இணைய இணைப்பும் தேவையில்லை.
இதற்கென தனி மொபைல் அப்பிளிகேஷனை பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது. அதை தங்களுடைய ஸ்மார்ட் போனில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது.
அதோடு இணையதளம் மூலமாக பேராசிரியர்கள், பிற மாணவர்களுடன் கல்வி தொடர்பாக உரையாடும் வசதியும் இந்த முறையில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களைப் பெற TNOU என 56767 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதுமானது. அல்லது www.tnouonline.ac.in என்ற இணையதளத்தையோ, 781000338 என்ற செல்லிடப் பேசியையோ மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்," என்றார்.