தமிழக வனக்காப்பாளர் பணிகளுக்கான தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், இத்தேர்விற்கான முடிவுகள் தாமதமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் காரணமாக அனைத்து அலுவல் பணிகளும் ஸ்தம்பித்துள்ளது. தற்போது அமலில் உள்ள 144 ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணிகளுக்குக் கடந்த மார்ச் 8 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு சட்டம் அமலில் உள்ளதால் வனக்காப்பாளர் பணித் தேர்வுக்கு பிந்தைய பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பிறகே வனக்காப்பாளருக்கான தேர்வுப் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.