சிறப்பு பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு வியாழனன்று முடிவுற்ற நிலையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3ம் தேதியன்று துவங்க உள்ளது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வந்தது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இவர்களுக்கு 6,915 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அழைக்கப்பட்ட 143 பேரில், 101 மாணவர்கள் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்தனர். இதனால், 6,814 இடங்கள் சேர்க்கையின்றி இருந்தன.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் 956 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 499 பேர் மட்டுமே பங்கேற்றனர். இவர்களில் 121 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
தொடர்ந்து, மூன்றாம் நாளான வியாழனன்று விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில், 500 இடங்களுக்கு 1,658 பேர் அழைக்கப்பட்டதில் 330 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
இதனால்,170 இடங்கள் சேர்க்கையின்றி காலியாகின. இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை ஆன்லைன் முறையில் ஜூலை 3 -ஆம் தேதியன்று தொடங்கி நடைபெறவுள்ளது.