சென்னை: லண்டன் கல்லூரியுடன் இணைந்து இணையவழிப் படிப்புகளை அறிமுகம் செய்துளள்ளது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்.
கால்நடை மருத்துவர்களின் தொடர் மேம்பாட்டுக்கான இந்தப் புதிய இணையவழி (ஆன்லைன்) படிப்புகள் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதற்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியும், லண்டன் ராயல் கால்நடை மருத்துவக் கல்லூரியும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த இணையவழிப் படிப்புகளை பிரிட்டீஷ் கவுன்சில் இயக்குநர்(தென்னிந்தியா) மீக்வி பார்க்கர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். திலகர் கால்நடை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தங்கள் தேடுதல்களைத் தொடரவேண்டும் என்றார் அவர்.
கால்நடை மருத்துவர்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இணையவழி முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்கி வருகிறது. மொத்தம் 20 இணையவழிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது லண்டன் கல்லூரியுடன் இணைந்து மருத்துவர்களுக்கான தொடர் மேம்பாட்டு இணையவழிப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த 10 வார இணையவழிப் படிப்புகள் வருகிற 2016 ஜனவரி மாதம் 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் சேர விரும்புபவர்கள் படிப்பு தொடங்குவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாக www.globalvetacademy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து படிப்பில் சேர்ந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












